தூத்துக்குடி, மே 26 –
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், திமுகவின் மறைந்த தூத்துக்குடி மாவட்டச் செயலாளருமான ‘முரட்டு பக்தர்’ பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 26) அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, தூத்துக்குடி போல்பேட்டையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பெ.கீதா ஜீவன், அவரது சகோதரரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான என்.பி. ஜெகன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் திரளாகக் கூடி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, தூத்துக்குடி கீதா ஹோட்டல் வளாகத்தில் மறைந்த பெரியசாமியின் நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வேட்டி சேலை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பிரம்மாண்ட அன்னதான வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அன்னதான நிகழ்வை முன்னாள் அமைச்சர் பெ.கீதா ஜீவன் மற்றும் மேயர் என்.பி.ஜெகன் ஆகியோர் முறைப்படி தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் GVமார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), கருணாநிதி (கோவில்பட்டி), அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்) மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய பெரியசாமியின் நினைவு தினத்தில் ஒட்டுமொத்த திமுகவினரும் திரண்டிருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



