தஞ்சாவூர், மே 15 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
மாவட்ட அளவில் 81 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் அரசு பள்ளிகள் பிரிவில் கடந்த ஆண்டு 12வது இடத்திலிருந்த தஞ்சாவூர் மாவட்டம் இந்த ஆண்டு மாநில அளவில் 7வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அரசு பள்ளிகளில் மட்டும் 23 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
இந்த ஆண்டு 105 அரசு பள்ளிகள், 40 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 84 தனியார் பள்ளிகள் என மொத்தம் 229 பள்ளிகளை சேர்ந்த 25,944 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். இதில் 25,215 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 96.04 சதவீதமும் மாணவிகள் 98.20 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் அரசு பள்ளிகளில் மட்டும் 10,176 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில் 9,746 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளில் மொத்த தேர்ச்சி விகிதம் 95.77 சதவீதமாகும்.
இதையடுத்து 100 சதவீத தேர்ச்சி பெற்ற 34 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களையும், கடந்த ஆண்டு விட அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற 68 பள்ளி தலைமை ஆசிரியர்களையும் பாராட்டி கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலக தியாகராஜன், முதன்மை கல்வி அலுவலர் பேபி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



