தூத்துக்குடி, ஜூன் 19 –
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் ஆணையர் மதுபாலன் தலைமையில் நடந்தது. துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தார். முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது: தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் கடந்த 22 ஆம் ஆண்டு முதல் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கிழக்கு மண்டலத்தில் இன்று 14வது முகாம் நடைபெறுகிறது. இதுவரை 2500 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வுகள் காணப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் உள்ள 60 வார்டுகளிலும் பொதுப்பிரச்சினை சுகாதாரம் வசதிகள் முழுமையாக தீர்க்கப்பட்டு வருகிறது. பிரதான சாலைகள் அனைத்தும் புதிதாக போடப்பட்டு உள்ளது. குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பகுதிகளில் புதிய ரோடுகள் போடுவதற்காக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தெப்பக்குளத்தை சீரமைத்து அதைச் சுற்றிப் பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. தூத்துக்குடியில் பொதுமக்கள் வசதிக்காக சால்ட் காலனி மற்றும் ஸ்டெம் பார்க் அருகே அம்பேத்கர் நகரில் புதிதாக இரண்டு காய்கறி மார்க்கெட் உருவாக்கப்பட உள்ளது. தற்போது கேரி பேக் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பக்கிள் ஓடையில் தண்ணீர் செல்ல முடியாத வகையில் கேரிபேக் மற்றும் குப்பைகள் போடப்பட்டு வருகிறது. இதை முழுமையாக தடுக்க கவுன்சிலர்கள் முழுமூச்சாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மேயர் பேசினார். முகாமில் மனு அளித்த 5 பேருக்கு உடனடியாக மேயர் சான்றிதழ்களை வழங்கினார். முகாமில் உதவி ஆணையர் வெங்கட்ராமன், மாநகர துணைப் பொறியாளர் சரவணன், நகர்நல அலுவலர் ரங்கநாதன், துணை ஆணையர் சரவணகுமார், உதவி செயற்பொறியாளர் இர்வின்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் தனலட்சுமி, ஜான்சி ராணி, மும்தாஜ், ராமு அம்மாள், மகேஸ்வரி, மரிய கீதா, சரண்யா, பேபி ஏஞ்சலின், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரை மணி, மேயரின் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ், பிரபாகரன், ஜெஸ்பர் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.