மார்த்தாண்டம், ஜூன் 15 –
திருவட்டாறு பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகில் நீர்வள ஆதாரத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகையை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமையில், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் கூறுகையில்: திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக அரசு விருந்தினர் சுற்றுலா மாளிகை பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த நிலையில் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. இதை பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் எனது கவனத்திற்கு கொண்டு வந்தன் அடிப்படையில் தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ரூ.80 இலட்சம் மதிப்பில் இந்த விருந்தினர் மாளிகையில் பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது மேலும் பல பகுதிகள் பழுதடைந்து உள்ளது. திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலுக்கு அருகாமையில் உள்ள சுற்றுலா விருந்தினர் மாளிகை பழமை மாறாமல் மேம்படுத்தப்படும். இவ்வாறு கூறினார்.
இந்த ஆய்வுகளில் பத்மநாபபரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) மோனிகா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, திருவட்டாறு வட்டாட்சியர் மரகதவல்லி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



