திருப்புவனம், ஆகஸ்ட் 23 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே புதூரில் வசிப்பவர் முகமது சியாத். இவருக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவரது இளைய மகன் தாகித் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் தாகித் வழக்கம் போல் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள வைகை ஆற்றில் குழிப்பதற்காக சென்றுள்ளார். சிறுவர்கள் நீரில் விளையாடி மகிழ்ந்த போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற தாகித் நீரில் பரிதாபமாக மூழ்கி உயிரிழந்தார்.
உடன் வந்த சிறுவர்கள் வீட்டில் சென்று தெரிவித்த நிலையில் சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், மீட்பு துறை மற்றும் திருப்புவனம் போலீசார் சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வைகை ஆற்றில் சிறுவன் உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


