மார்த்தாண்டம், ஆக. 28 –
மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளியில் பயின்று தேர்ச்சிபெற்ற மாணவ மாணவியர்களுக்கான “நான் முதல்வன் உயர்வுக்கு படி” திட்ட முகாமானது இன்று (28.08.2025) திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து மாணவ மாணவியர்களிடையே பேசுகையில்:
இம்முகாமின் மூலம் எந்த கல்லூரியை தெரிவு செய்வது மற்றும் எந்த கல்லூரியில் படித்தால் அரசின் நல திட்டங்களை முழுமையாக மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும், சிறந்த கல்லூரியை தெரிவு செய்வது எப்படி மற்றும் சிறந்த கல்லூரியில் படிப்பதினால் எத்தகைய வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள இயலும் என்பது சார்ந்த வழிகாட்டுதல்கள் மற்றும் மாணவர்களின் ஐயங்கள் சார்ந்த தெளிவுரைகள் வழங்கப்படும்.
2024-2025 ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பில் சுமார் 24 ஆயிரம் மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 23 ஆயிரம் மாணவ மாணவியர்கள் பொறியியல் உட்பட பல்வேறு மேற்படிப்பில் சேர்ந்துள்ளார்கள். இதுவரை எந்த கல்லூரியிலும் சேராமல் மீதமுள்ள சுமார் ஆயிரத்திற்குட்பட்ட மாணவ, மாணவியர்களை கண்டறிந்து அவர்கள் அனைவரும் மேற்படிப்பினை தொடர வேண்டும் என்ற நோக்கில் தகுதியான படிப்பினை தேர்ந்தெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே இம்முகாமின் நோக்கமாகும். இவ்வாறு கூறினார்.
நடைபெற்ற முகாமில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஷெர்லின் மேரி (மார்த்தாண்டம்), ஜெயராஜ் (நாகர்கோவில்), துறை அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், வங்கியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



