தருமபுரி, ஜூலை 21 –
தருமபுரி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்கவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை முழுமையாக செயல்படுத்தவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் ரவி, பச்சமுத்து மற்றும் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் ஆகியோரின் ஆணைக்கிணங்க, தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் நஞ்சப்பன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சுப்பிரமணியம், மண்டல செயலாளர் ராஜ்குமார் மற்றும் மண்டல துணைச் செயலாளர் ராஜசேகரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சி தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், குடிநீர் தேவையையும் கடுமையாக பாதிக்கும் எனக் கூறி கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழகத்திற்கு உரிய நீர் உரிமையை மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதியுடன் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் இந்திய ஜனநாயக கட்சி ஒருபோதும் ஏற்காது என்றும், மேகதாது அணை திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். ஆர்பாட்டத்தின் போது “மேகதாது அனைத்திட்டத்தை கைவிடு”, ” தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை பாதுகாத்திடு”, “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்று” உள்ளிட்ட கோஷங்கள் முழங்கப்பட்டதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மேகதாது அணை திட்டத்திற்கு எதிராகவும், தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை கருணாகரன் தருமபுரி சட்டமன்றம், முனிரத்தினம் பாலகோடு சட்டமன்றம், பெருமாள் பென்னாகரம் சட்டமன்றம், ராஜீவ் காந்தி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றம் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.



