தருமபுரி, ஜனவரி 19 –
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரியான்கொட்டாய் பகுதியில் குருமன்ஸ் இன மக்கள் 150 – க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வீரபத்திரன் தோப்பு என்கிற இடத்தில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் வீரபத்திரன் கோயில், பெரிய ஆலமரம் அமைந்துள்ளது. இந்த ஆலமரம் அமைந்துள்ள வீரபத்திரன் கோயில் பகுதியில் குருமன்ஸ் இன மக்கள் பாரம்பரியமாக குழந்தைகளுக்கு முடி எடுத்தல், காது குத்துதல், பெயர் வைத்தல் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த புதன் கிழமை நெடுஞ்சாலைத்துறையினர், வீரபத்திரன் கோவில் தோப்பு, நெடுஞ்சாலை துறைக்கு சொந்தம் என தெரிவித்து மரத்தை வெட்டி அகற்றியுள்ளனர். இதனை அறிந்த குருமன்ஸ் இன மக்கள் தங்களது மூதாதையர் காலத்தில் இருந்து ஆயிரம் ஆண்டுகளாக வழிபட்டு வந்த இடத்தில் இருந்த ஆலமரத்தை நெடுஞ்சாலை துறை வெட்டுவதற்கு, எங்களுக்கு எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல் அகற்றி உள்ளனர். இது குறித்து நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்களிடம் கேட்டபோது எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.
எனவே எங்களது குலதெய்வ வனத்தையும், ஆலமரத்தையும் அகற்றாமல், பழங்குடியின மக்களாகிய எங்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும். இந்த இடத்தை பாதுகாப்பதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி குருமன்ஸ் இன மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும் இந்த வீரபத்திரன் தோப்பை அகற்றியதற்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றால், மிழலை நாடு மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.



