சென்னை, ஆகஸ்ட் 18 –
தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் தமிழ்நாடு தேசிய காங்கிரஸ் மின்சார தொழிலாளர் சம்மேளனம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தமிழ்நாடு மின்சார மின்வாரியம் தலைமை அலுவலகம் அருகில் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் கொளத்தூர் ஜி. சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி பொதுச்செயலாளர் டி.வி. சேவியர் முன்னிலையில் நடைபெற்றது.
கொளத்தூர் ஜி. சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: விநியோக வட்டத்தில் இன்று வரை பணிபுரியும், பணிபுரிந்த, 2007-ல் விடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், மின்வாரிய நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட கே-20 ஒப்பந்த தொழிலாளர்கள், லேபர் கோர்ட் வழக்கில் வெற்றி பெற்ற 6788 ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் நல ஆய்வாளரிடம் வழக்கு தொடுத்த தொடுக்காத ஒப்பந்த தொழிலாளர்கள், அனைத்து அனல் மின் உற்பத்தி நிலையம், அனைத்து நீர் மின் உற்பத்தி நிலைய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தற்காலமாக வழங்கிய 25 -சி விதி 103 – சி-ன் கீழ் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை முறையாக வழங்க வேண்டும்.
மின்சார வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியின் போது மின்சாரம் தாக்கி மரணம் அடைந்துள்ளனர். மின்சார வாரியம் இதை மூடி மறைக்கின்றது. இவர்களுக்கு நீதி கிடைக்க நீதி விசாரணை செய்ய தமிழ்நாடு அரசு சிபிஐக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மின் வாரிய பகுதி நேர ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்த பணியாளர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அதிமுக ஆட்சியில் எழுத்து தேர்வில் தேர்வாகாத கேங்மேன் 5493 நபர்களுக்கு பணி வழங்கக் கூடாது. டிஎன்பிஎஸ்சி மூலம் ஐடிஐ படித்தவர்களை பணிக்கு எடுக்கக் கூடாது. 5 முதல் 20 ஆண்டுகளுக்கு மேல் மின் பணியில் அனுபவம் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை எந்த வித தேர்வும் இல்லாமல் நேரடியாக பணியமர்த்தவேண்டும் ஆகிய கோரிக்கை நாங்கள் வலியுறுத்தி இந்த தொடர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி உள்ளோம் என்றார்.
மேலும் வி.சி.எல்.பி.யூ மாநிலத் தலைவர் டி. கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் செங்கை டி. சுரேஷ், மாநிலத் துணைத்தலைவர் ஜெ. பாலு, ஒருங்கிணைப்பாளர் கே. ராஜா, ஐ.என்.டி.யூ.சி மாநிலத் தலைவர் கே. மனோகரன், செயல் தலைவர் செல்வராஜ், பொருளாளர் எஸ். சுப்பிரமணி உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.



