திண்டுக்கல், செப். 20 –
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தி வருகிறார்.
இம்முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மகளிர் உரிமைத் தொகை, மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, புதிய மின் இணைப்பு, பட்டா பெயர் மாற்றம்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு 45 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசுப் பள்ளியில் படித்து கல்லூரி மேல்படிப்பிற்குசென்றால் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மாணவிகளுக்கு புதுமை பெண், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டங்களின் கீழ் சுமார் 18 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
மேலும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் ரூ.5 இலட்சம் மதிப்பில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம். இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியின் போது வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், மேற்கு வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியன், பேரூராட்சித் தலைவர் கவிதா சின்னதம்பி, துணை தலைவர்கள் நாகப்பன், ஜெயபால், செயல் அலுவலர்கள் பானு ஜெயராணி, சூசை இன்பராஜேஷ், அகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜெயபால், கிராம நிர்வாக அலுவலர்கள் லோகநாதன், அருண் பாண்டியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



