சென்னை, ஏப்ரல் 02 –
தமிழ்நாடு பழங்குடியினர் பேரவை சார்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடைபெற இருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கும் போது தமிழகத்தில் நிலுவையில் இருக்கும் பழங்குடியினர் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும் தமிழகம் முழுவதிலும் வாழும் பல்வேறு பழங்குடி அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரே அமைப்பாக செயல்பட்டு எங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கும் முயற்சியாக இக்கூட்டமைப்பாக இப்பேரவையை உருவாக்கி உள்ளோம் என்று அதன் தலைவர் எம். ஆல்வாஸ் தெரிவித்தார்.
பழங்குடி போலி சான்றிதழ் மூலம் அரசு பணியில் இருக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்திட வேண்டும். இதனால் நியாயமான முறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வழக்கத்தில் பழங்குடிகளுக்கு இட ஒதுக்கீட்டை ஒரு 1% என்பதை 5% உயர்த்திட வேண்டும். பழங்குடி நிலங்களை மற்ற சமூகத்திற்கு பயன்படுத்துவதையோ விற்பது, வாங்குவது போன்ற நடவடிக்கைகளை தடை செய்ய வேண்டும் என்பதை தீவிரமாக நடைமுறைப்படுத்திட வேண்டும்.
மேலும் தமிழகத்தில் 37 வகையான பழங்குடியின பிரிவுகள் உள்ளதாக கூறினாலும் இதில் 22 வகை பழங்குடியின பிரிவினர் மட்டுமே உள்ளனர். ஆகவே பழங்குடிகள் என்று போலியான சான்றிதழ் பெறுவதை தடுக்கவும் உண்மையான மக்கள்தொகை அறியவும் மைசூர் ஏ.எஸ்.ஐ அமைப்புடன் இணைந்து சரியான முறையில் சர்வே செய்ய வேண்டும். பழங்குடியின் எம்.எல்.ஏ தொகுதிகளை மீண்டும் மூன்றாக உயர்த்த வேண்டும்.
பழங்குடி பகுதிகளை ஒன்றிணைத்து ஊராட்சியை உருவாக்கித் தரவேண்டும் மற்றும் மலை கவுன்சில்களை அமைக்க வேண்டும். இதன் வாயிலாக பழங்குடியினருக்கான உள்கட்டமைப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் இச்செய்தியாளர்கள் சந்திப்பில் பொதுச்செயலாளர் கே.கோவிந்தன், பொருளாளர் பி.சந்திரன் மற்றும் நீலகிரி, கோவை, சேலம், விழுப்புரம், ஜவ்வாது மலை ஆகிய பகுதிகளில் உள்ள பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



