கிருஷ்ணகிரி, ஜூலை 24 –
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், அந்தேரிப்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் தபால் நிலையத்தில் நிலவும் அலட்சியத்தால், தபால்கள் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை என அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
தபால் நிலையத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பள்ளி மாணவர்கள், வேலைவாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அரசு வேலைவாய்ப்பு தொடர்பான அழைப்புக் கடிதங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் அவசர அஞ்சல் பொருட்கள் தாமதமாக கிடைப்பதால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக, கிருஷ்ணகிரி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலிருந்து தமிழ்நாடு அரசு தேசிய வேலைவாய்ப்பு பணி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அனுப்பப்பட்ட EMS ஸ்பீடு போஸ்ட் (ET585273213IN) கடிதம் 15.07.2026 அன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில் 21.07.2026 அன்று நடைபெறும் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் கடிதம் சம்பந்தப்பட்ட நபரிடம் 22.07.2026 அன்று மதியம் 12.20 மணியளவில் மட்டுமே கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் 21.07.2026 அன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனதால், அரசு வேலைவாய்ப்பு வாய்ப்பை இழந்ததாக இளைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் தபால் துறை உயர் அதிகாரிகள் உடனடியாக அந்தேரிப்பட்டி தபால் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, தபால்கள் ஏன் தாமதமாக வழங்கப்படுகின்றன, பணியாளர்கள் முறையாக பணியாற்றுகிறார்களா என்பதை விசாரித்து, அலட்சியத்திற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



