தஞ்சாவூர், மே 16 –
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 658 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 166 வாகனங்கள் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு நிவர்த்தி செய்ய 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வட்டார போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை சார்பில் பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? பாதுகாப்பு, தீ தடுப்பு கருவி, முதல் உதவி பெட்டி போன்றவை சரியாக உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான ஆய்வு தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் காணிப்பாளர் சுந்தரவதனம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஒவ்வொரு வாகனங்களாக ஏறி சுப்ரீம் கோர்ட்டு சாலை பாதுகாப்பு குழு அறிவுறுத்தலின்படி பள்ளி வாகனங்களில் இருக்கைகளின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா? பிரேக் நல்ல முறையில் இருக்கிறதா? படிக்கட்டுகள், தீ தடுப்பான் என ஒவ்வொன்றாக ஆய்வு செய்தனர்.
பள்ளி வாகனங்களுக்கான அனுமதி சீட்டு, தகுதி சான்று, காப்பு சான்று, புகை சான்று, வரி சான்று, வேகக் கட்டுப்பாட்டு கருவி பயன்பாடு நிலை, ஜி.பி.எஸ். கருவி பயன்பாடு, முதலுதவி பெட்டியில் மருந்துகள் இருப்பு நிலை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தும், பள்ளி வாகனங்களில் அவசர வழி முறையாகவும், அதை திறப்பது சிரமம் உள்ளதா? எனவும் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லும் டிரைவர்கள் கவனமுடன் செல்ல வேண்டும். டிரைவர்கள் செல்போன் பேசிக் கொண்டு வாகனங்களை ஓட்டக் கூடாது. ஒவ்வொரு பள்ளி வாகனங்களிலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருதி பெண் பணியாளர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். குறைபாடுகள் உள்ள வாகனங்கள் குறைகளை சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூரில் 60 பள்ளிகளை சேர்ந்த 538 வாகனங்கள், பட்டுக்கோட்டையில் 45 பள்ளியைச் சேர்ந்த 365 வாகனங்கள், கும்பகோணம் 59 பள்ளிகளைச் சேர்ந்த 260 வாகனங்களில் என மொத்தம் 164 பள்ளிகளைச் சேர்ந்த 1,163 வாகனங்கள் அனுமதி சான்று வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 658 வாகனங்கள் மட்டுமே ஆய்வுக்கு வந்திருந்தது. இதில் 166 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் அந்த குறைகளை நிவர்த்தி செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக டிரைவர்களுக்கு செவித்திறன், கண்பார்வை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முதல் முறையாக தாசில்தார் நிலையில் உள்ள வருவாய்த்துறையினர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் இரு சம்மாள், வருவாய் கோட்டாட்சியர் நித்யா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) சீமான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



