தஞ்சாவூர், மே 2 –
தஞ்சாவூர் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறப்பு விழா நடிகர் சிவகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தஞ்சாவூர் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்த சிறப்பு விழாவில் நடிகர் சிவகுமார் பேசியதாவது: என் கிராமத்தில் இருந்த திரையரங்கில் முதல் முதலாக சிவாஜி நடித்த பராசக்தி படத்தை 1952 இல் 10 வயதில் பார்த்தேன். அடுத்து அவரது மனோகரா படம் மறக்க முடியாதது. அதன் பின்னர் 1957இல் அவர் நடித்த வணங்காமுடி படத்தை கோவை திரையரங்கில் பார்த்தேன். அடுத்து உத்தம புத்திரன் படத்தை பார்த்துவிட்டு சிவாஜியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என முடிவு செய்தேன். அந்த வாய்ப்பை கடவுள் 18 வயதில் கொடுத்தார்.
அன்னையின் ஆணை என்கிற படத்தில் இடம்பெற்ற சாம்ராட் அசோகன் என்ற நாடகத்தில் அவர் நடித்ததை போல வேறு யாராலும் நடிக்க முடியாது. இந்த பிறவியில் ஒருவராலும் நடிக்க இயலாது, அதை பார்த்த பின்னர் மறந்தும் நடிகனாக விடக்கூடாது. எவ்வளவு சோதனை வந்தாலும் நடிப்பதற்கு மட்டும் சத்தியமாக போய்விடக்கூடாது என நினைத்தேன். ஆனால் கடவுள் என்னை நடிகனாக்கிவிட்டார். 7 ஆண்டுகள் நாடு முழுவதும் சுற்றி ஓவியம் வரைந்து கொண்டிருந்தேன். அதன் பிறகு மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் சிவாஜிக்கு பெரிய மாப்பிள்ளையாக நடித்தேன்.
இந்த மகத்தான கலைஞனுடன் 15 படங்கள் நடித்தேன். கடைசி படம் பசும்பொன் சிவாஜியை பற்றி முனைவர் மருது மோகன் 12 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து சிவாஜி கணேசன் என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். சிவாஜியை பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த புத்தகத்தை வாங்கினால் போதும். சிவாஜி கணேசன் வீட்டில் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டால் இந்த புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம் என்ற சிவக்குமார் பின்னர் சிவக்குமார் ஈரோடு புத்தகத் திருவிழாவில் நிகழ்த்திய சிவாஜி ஒரு சகாப்தம் என்ற உரையின் காணொளி ஒளிபரப்பப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தார். பேரவையின் பொதுக் குழு உறுப்பினர் அன்பழகன் முன்னிலை வகித்தார். பாம்பே ஸ்வீட்சால் குரு. சுப்ரமணிய சர்மா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவையாற்றிய டாக்டர் மருது துரை, டாக்டர் ராதிகா மைக்கேல், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் ஆகியோருக்கு பாராட்டு கேடயங்களை நடிகர் சிவகுமார் வழங்கினார். முன்னதாக பேரவையின் துணைத் தலைவர் பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் ராதிகா மைக்கேல் நன்றி கூறினார்.



