தஞ்சாவூர், ஜூன் 3 –
தஞ்சாவூரில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் முத்து பல்லக்கு விநாயகர் முருகன் அம்மன் வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரலாற்று பெருமை கொண்ட தஞ்சாவூர் நகரில் நடைபெறும் பாரம்பரிய விழாக்கள் ஒன்று முத்து பல்லக்கு விழாவாகும். திருஞான சம்பந்தர் சுவாமிகளின் குருபூஜையொட்டி இந்த முத்து பல்லக்கு விழா கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இதையொட்டி தஞ்சாவூரில் உள்ள பல்வேறு கோவில்களிலிருந்து விநாயகர் முருகன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி 4 ராஜ வீதிகளிலும் உலா வருவார்கள். அதன்படி இந்த ஆண்டு முத்து பல்லக்கு விழா நடைபெற்றது.
அதன்படி கீழவாசல் வெள்ளை பிள்ளையார் கோவில், குறிச்சி தெரு சுப்பிரமணியசுவாமி, ஆட்டுமந்தை தெரு பால தண்டாயுதபாணி, சின்ன அரிசிக்காரர் தெரு பழனி ஆண்டவர், மகர் நோன்பு சாவடி சௌராஷ்டிரா தெரு, ஜோதி விநாயகர், தெற்கு ராஜவீதி கமல ரத்தின விநாயகர், மேல ராஜவீதி சுப்பிரமணிய சுவாமி, மேல ராஜவீதி திருஞான சம்பந்தர், வடக்கு வாசல் பாலதண்டாயுத பாணி, மாமா சாகிப் மூலை சித்தி விநாயகர், சுரேஸ் சத்திரம் சாலை பத்ரகாளியம்மன், காமராஜர் மார்க்கெட் செல்வவிநாயகர், கொடிமரத்து மூலை பால தண்டாயுதபாணி, மேல வெளி ஊராட்சி ரெட்டிபாளையம் சாலையில் உள்ள வெற்றி முருகன், தனலட்சுமி நகரை சேர்ந்த வலம்புரி விநாயகர் உள்பட பல்வேறு கோயில்கள் இருந்து விநாயகர் முருகனும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்ட முத்து பல்லக்கில் எழுந்தருளியிருந்தனர்.
பல்லக்குகள் பூக்களாலும் பல வண்ண காகிதங்களாலும் மின் விளக்குகளாலும் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டு இருந்தன. இந்த பல்லக்குகள் அந்தந்த கோயில்களில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் தெற்கு வீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழ ராஜவீதி ஆகிய வீதிகளின் மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் வலம் வந்தன. முத்து பல்லக்கு வீதி உலா இரவு தொடங்கி மறுநாள் காலை வரை விடிய விடிய நடைபெற்றது. இதில் தஞ்சை மட்டுமல்லாது சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



