தஞ்சாவூர், மே 7 –
தஞ்சாவூர் காவிரி சிறப்புங்காடி அருகே உள்ள மாலை நேர காய்கறி அங்காடி முன் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் காரல் மார்க்ஸின் 208-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதனுடன் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜமீன், பண்ணை கொடுமைகளை ஒழித்து சுயமரியாதை பெற்றுத் தந்த வாட்டாக்குடி இரணியன், ஜாம்பவானோடை சிவராமன், ஆம்லாப்பட்டு ஆறுமுகம் ஆகிய தியாகிகளின் 76 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் உழைக்கும் மக்கள் விடுதலைக்காகவும், உழைப்பு சுரண்டலில் இருந்து மக்களை விடுவிக்கவும், போர் இல்லாத உலகத்தை படைத்திடவும், நாட்டின் செயல்படும் இடதுசாரிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். மக்கள் விடுதலைக்காக செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மக்களை வர்ணாசிரம அடிப்படையில் ஜாதி, மத ரீதியாக பிளவுபடுத்தும் கார்ப் பரேட் காவி பாசிசத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள், முற்போக்கு சக்திகளை அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என உறுதி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா தலைமை வகித்தார். மக்கள் அதிகாரம் மூத்த தலைவர் காளியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மூத்த தலைவர் வீர. மோகன், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், சி பி எம் எல் மக்கள் விடுதலை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதி வேல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் தமிழ் முதல்வன், சி ஐ டி யு மாவட்ட துணை செயலர் அன்பு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் யோகராஜ், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன், நிர்வாகி பக்ருதீன், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் தனபால், சேகர், மாலை நேர காய்கறி அங்காடி நிர்வாகி பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



