தக்கலை, ஜூன் 11 –
தக்கலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட திருவிதாங்கோடு விநாயகர் தெரு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி பாலன் (50). இவர் திருவிதாங்கோடு பகுதியில் ஆக்கர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 02 ம் தேதி அன்று கடையை பூட்டி விட்டு வீடு சென்றார். மறுநாள் காலையில் வந்து கடையை திறக்கும் போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடையை உடைத்து செம்பு கம்பிகளை திருடியது தெரியவந்தது. உடனே தக்கலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி, தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில் தக்கலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கின் குற்றவாளிகள் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அய்யனாத்து பகுதி சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் ஹரி கணேஷ் குமார் (24) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் கணபதி (25) என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து திருட்டுப் போன 129 கிலோ காப்பர் மற்றும் 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணம், சுமார் 15 கிராம் தங்க நகைகள் மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய இரண்டு கார்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக பணியாற்றி குற்றவாளிகளை கைது செய்து பணம் மற்றும் நகைகளை மீட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.


