சுசீந்திரம், செப். 4 –
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ஆஸ்ரமம் பகுதியில் உள்ள சோழன் திட்டை பழைய ஆற்றில் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ஆஸ்ராமம் பகுதியில் உள்ள சோழன் திட்டை பழைய ஆற்றில் பேரிடர் காலங்களில் பொது மக்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு செயல்முறை விளக்க ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்றது. மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கின் போது ஏற்படும் பாதிப்பை ரப்பர் படகுகள், பரிசல் மூலம் தண்ணீரில் மூழ்கி தத்தளிப்பவர்களை மீட்பது குறித்த செயல் விளக்கத்தை தீயணைப்புத் துறையினர் செய்து காண்பித்தனர்.
மேலும் வெள்ளத்தால் பொது மக்கள் பாதிக்கப்படும்போது வாழைத்தண்டு பந்து டயர் டியூப் போன்ற மிதக்கும் பொருட்களைக் கொண்டு எவ்வாறு கரை சேர்ப்பது, ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை கயிறு கட்டி மீட்பது குறித்தும் தீயணைப்புத் துறையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்த பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில் திரளான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.
இந்த பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை சார்பில் வெள்ளத்தில் மூழ்குபவர்களை உடனடியாக மீட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை எப்படி அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் செய்முறை விளக்கம் அளித்து மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை அலுவலர்கள் வருவாய் துறை மற்றும் சுகாதாரத்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



