சேலம், ஆக. 28:
மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரின் அறிவுறுத்தலின்படி, சேலம் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல் கட்டமாக வீடுகளின் பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு பணிகள் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
இதற்காக மாவட்டம் முழுவதும் 4,635 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 808 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு வழங்கிய அடையாள அட்டையுடன் அவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று தேவையான விவரங்களை சேகரித்து வருகின்றனர். இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027 பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் மாசிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் நேரில் ஆய்வு செய்தார். கணக்கெடுப்பு பணிகளின் முன்னேற்றம் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் முக்கியமான பணி என தெரிவித்த ஆட்சியர், பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், கணக்கெடுப்பு அலுவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.



