சேலம், ஜூலை 28 –
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி – 2026 ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கி 45 நாட்கள் நடைபெற உள்ளது. அதனை ஒட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சேலம் போஸ் மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நடத்தப்பட உள்ள அரசு பொருட்காட்சியில் தமிழ்நாடு அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து மேலும் பயன்பெறும் வகையில் சேலம் மாநகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, போக்குவரத்து துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, வருவாய் துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, காவல்துறை கூட்டுறவு துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பள்ளி கல்வித்துறை, சமூக நலன் மகளிர் உரிமை துறை, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை, மற்றும் மலைப் பயிர்கள் துறை, பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, தொழில்துறை, நெடுஞ்சாலை துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சுற்றுலாத்துறை, மீன்வளத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு துறை, ஆவின் நிறுவனம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பேரூராட்சிகள் துறை என மொத்தம் 32 துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.
மேலும் இந்த அரசு பொருட்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களும் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பல்வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட உள்ளது. அரசு பொருட்காட்சி நடைபெறும் நாட்களில் காவல் துறையினர் மூலம் உரிய பாதுகாப்பு வசதி மேற்கொள்ளப்படும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் பொருட்காட்சி மைதானத்தில் முதலுதவி மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை செய்வதற்காக ஒரு மருத்துவர் தலைமையிலான குழு அமைக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் தீயணைப்பு வண்டியை உரிய அலுவலர்களுடன் பொருட்காட்சி மைதானத்தில் அனைத்து நாட்களிலும் தயார் நிலையில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி சார்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து தரப்பு மக்களும் தமிழ்நாடு அரசின் திட்டங்களை மென்மேலும் அறிந்து பயன்பெறும் வகையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் தங்கள் துறையின் பொருட்காட்சி அரங்குகளை சிறப்பான முறையில் அமைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தெரிவித்தார்.



