சுசீந்திரம், ஏப். 24 –
பிரசித்தி பெற்ற பழமையான திருக்கோவில்களில் சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் ஒன்றாகும் இந்த கோவிலில் வருடம் தோறும் சித்திரை மாத தெப்பத் திருவிழா கொடியேற்றுத்துடன் துவங்கி பத்து நாட்கள் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு தெப்பத் திருவிழாவிற்காக கடந்த 18ம் தேதி காலை 11 மணி அளவில் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. காலை, மாலை வேளைகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி அம்பாள் பெருமாள் வாகனப் பவனி நடைபெற்றது.
ஆறாம் திருவிழாவான 23ம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி அம்பாள் பூங்கோயில் வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5:30 மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் இரவு 9:30 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏழாம் திருவிழாவான இன்று காலை 5 மணி அளவில் பல்லக்கு வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி மாலை 5:30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் மண்டகப்படிக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் இரவு ஒன்பது முப்பது மணி அளவில் கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
எட்டாம் திருவிழாஅன்று காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் காலை 10 மணிக்கு அலங்கார மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும் சிவகாமி அம்பாளுக்கும் அஷ்டபிஷேகம் நடைபெறுகிறது. மாலை ஐந்து முப்பது மணிக்கு அலங்கார மண்டபத்தில் வைத்து நடராஜ பெருமானுக்கும் சிவகாமி அம்பாளுக்கும் அஸ்ட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 7:30 மணியளவில் சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் 9.30 மணி அளவில் பறங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஒன்பதாம் திருவிழாவான 26ம் தேதி காலை 6 மணிக்கு இந்திர வாகனத்தில் மகாவிஷ்ணு அம்பாள் திருவீதிஉலா வரும் நிகழ்ச்சியும் காலை 8:30 மணியளவில் விநாயகர் தேரில் விநாயகரும் சப்பர தேரில் சுவாமியும் அம்மன் தேரில் அம்மனும் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து கோவிலை ஒரு முறை வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பத்தாம் திருவிழாவான 27ம் தேதி இரவு 8 மணி அளவில் சுவாமி அம்பாள் பெருமாள் ஆகியோரை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வைத்து தெப்பக்குளத்தை சுற்றி மூன்று முறை வலம் வரும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இரவு 12 மணியளவில் சுவாமிக்கு திரு ஆராட்டு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், தாணு மாலைய சுவாமி கோவில் பக்தர்கள், பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.



