சுசீந்திரம், மார். 7 –
சுசீந்திரம் அருகே உள்ள ஆஸ்ராமம் பகுதியில் பூதத்தார் இசக்கியம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் சம்பவதன்று (5-3-2026) இரவு பூஜைகள் முடிந்து வழக்கம் போல் கோவில் பூட்டப்பட்டது. நேற்று கோவிலை திறக்க பூசாரி வந்தபோது கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி கோவிலுக்கு உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோவிலுக்குள் இருந்த பித்தளை சூலாயுதம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து பூசாரி அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர்.
இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் கோவிலின் செயல் அலுவலர் கொம்புக்குமார் வயது 33, புகார் செய்தார் அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த கோவிலில் திருடியது மருங்கூர் அருகே உள்ள அமராவதிவிளை தெற்குதெருவை சேர்ந்த மரியசேவியர் (37) என்பதும் கொத்தனாராக வேலை பார்த்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மரிய சேவியரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மரிய சேவியரை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.



