கிருஷ்ணகிரி, ஜூலை 17 –
ஆடி மாதத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 17, 2026) ஆடி முதல் வெள்ளி அனுசரிக்கப்படுவதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கிருஷ்ணகிரி சென்னை சாலையில் பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரம் வெள்ளிக்கிழமை தோறும் அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருவது வழக்கம். கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்களும், வழிபாடுகளும் நடைபெற்றன.
ஆடி முதல் வெள்ளியான இன்று பெரிய மாரியம்மன் கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு 1008 விளக்குகளுடன் மிகப்பிரமாண்டமாக அபிஷேகங்கள் மற்றும் பல வகையான பூஜைகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி பகுதி மக்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள கிராமத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பெரிய மாரியம்மன் கோவிலில் குவிந்தனர். அங்கு குவிந்த பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர். கோவில் முழுவதும் 1008 விளக்குகளை ஏற்றி வைத்ததை பார்த்த பக்தர்கள் பிரமிப்புடன் பார்த்துச் சென்றனர். பெண்கள் பலர் கோயில்களில் பொங்கல் வைத்தும், பால் அபிஷேகம் செய்தும் அம்மனை தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டு ஆடி மாதப் பிறப்பும், வெள்ளிக்கிழமையும் ஒரே நாளில் இணைந்துள்ளதால் பெரியமாரியம்மனை வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் தரும் என்பது நம்பிக்கை. மிகப்பிரமாண்டமாக 1008 விளக்குகளை ஏற்றி வைத்து கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டதை பார்த்த பொதுமக்கள் அனைவரும், சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ஆலய அறங்காவலர் முத்துக்குமார் மற்றும் ஆலய விழா குழுவினரை பாராட்டி சென்றனர்.



