சென்னை, ஜூலை 14 –
பல்வேறு நிலைகளில் முதுகெலும்பு நரம்பு சுருக்கம் மற்றும் சிதைகின்ற முதுகெலும்பு பக்கவிளைவால் நடக்க முடியாமல் கடும் சிரமத்தை எதிர்கொண்ட 84 வயது முதியவருக்கு, வழக்கமான திறந்தநிலை முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையைத் தவிர்த்து, ஒரே ஒரு சிறிய துளை வழியே செய்யப்படும் நவீன எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சையைச் செய்து சென்னை சிம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் குணமளித்திருக்கின்றனர். வெறும் 8 மி.மீ அளவிலான சிறிய துளை மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிநவீன ‘யூனிபோர்ட்டல் எண்டோஸ்கோபிக்’ சிகிச்சை, முதியவரின் தண்டுவட நரம்பு அழுத்தத்தை முழுமையாக நீக்கி, அவரை மீண்டும் தன் சொந்தக் கால்களில் நடக்க வைத்துள்ளது.
இந்தச் சாதனை சிகிச்சையை சிம்ஸ் மருத்துவமனையின் எலும்பியல் மற்றும் தண்டுவட சிகிச்சை நிபுணர்களான டாக்டர் ஜி. வெங்கடேஷ் குமார், டாக்டர் விக்னேஷ் ஜெயபாலன் மற்றும் இதய நோய் நிபுணர் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கின்றனர்.
இதுகுறித்து டாக்டர் வெங்கடேஷ் குமார் கூறுகையில்: “இந்த முதிய நோயாளி கடுமையான வலியால் நடமாட்டமின்றி, எமது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். தாங்க முடியாத வலியின் காரணமாக அவரால் சில அடி தூரம் வரை கூட நடக்க முடியவில்லை. பரிசோதனையில், அவருக்குத் தண்டுவடத்தில் ஏற்பட்ட வளைவு காரணமாக, இடுப்புப் பகுதியில் நரம்புகள் கடுமையாக அழுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
பொதுவாக இதுபோன்ற பாதிப்புகளுக்கு தண்டுவடத்தில் ராடுகள் மற்றும் ஸ்க்ரூக்களைப் பொருத்திப் பெரிய அளவிலான அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். ஆனால், தண்டுவட சிகிச்சையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், வெறும் 8 மி.மீ துளை வழியே எண்டோஸ்கோபிக் முறையில் நரம்பு அழுத்தத்தை எங்களால் வெற்றிகரமாக நீக்க முடிந்தது. அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே வலி எதுவுமின்றி நோயாளியால் நடக்க முடிந்தது” என்றார்.



