திண்டுக்கல், செப்.05.
திண்டுக்கல் மாவட்டத்தில் விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கரின் 225-வது நினைவு நாள் அரசு விழா நேற்று நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விருப்பாட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கோபால் நாயக்கர் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரது திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அய்யனார் ஆகியோர் முன்னிலையில் இந்த மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கோபால் நாயக்கரின் விடுதலைப் போராட்டப் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் பழனி வருவாய் கோட்டாட்சியர் (பொ) பிரபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜசெல்வன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் சண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தாஹிரா, முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.



