நாகர்கோவில், நவ. 27 –
தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரியின் சிறுபான்மையினருக்கான மக்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.40 கோடி மதிப்பில் கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள திறன் பயிற்சி நிலையம் மற்றும் பிரதம மந்திரியின் ஜன்விகாஸ் காரிய கிராம் திட்டத்தின் கீழ் (2021-2022) ரூ.1.40 இலட்சம் மதிப்பில் வட்டவிளையில் பல்நோக்கு சமுதாய நலக்கூடம் ஆகிய புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டது.
இவற்றை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா குத்துவிளக்கேற்றினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ராகுல் குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, கோணம் அரசு தொழில்பயிற்சி நிலைய நிர்வாக அலுவலர் திருமலை ராஜ், துறை அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



