ஈரோடு, ஜூன் 12 –
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் ஜவுளித் தொழில் அதிகளவு நடக்கிறது. கைத்தறி தொழிலையும், நெசவாளர்களையும் காப்பாற்றும் நடவடிக்கையாக, கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டம் உள்ளது. இதை அமல்படுத்த ஏதுவாக ஈரோடு சூரம்பட்டியில் அமலாக்கப் பிரிவு அலுவலகம் இயங்குகிறது.
கைத்தறிக்கு என பேட்டு, பார்டர் டிசைனில் பருத்தி மற்றும் பட்டுசேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்ஷீட், டிரஸ் மெட்டிரியல், ஜமக்காளம், கம்பளிகள், ஷால், உல்லன் ட்வீட் மற்றும் சந்தர் உள்ளிட்ட 11 இரகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேற்படி இரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வது கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டப்படி குற்றம் ஆகும்.
மேற்படி கைத்தறி இரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது குறித்து அமலாக்க ஆய்வுக் குழு மூலம் தினசரி ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆய்வின்போது தவறுகள் கண்டறியப்பட்டால் காவல் நிலையத்தில் புகார் செய்து நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டத்திருத்தப்படி ரூ. 10,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படுகிறது.
மேற்படி கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட இரகங்கள் குறித்த விபரம் தேவை எனில், ஈரோடு அமலாக்க பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


