மார்த்தாண்டம், ஆக. 13 –
மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் குழித்துறை தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் வழியாக இன்று (புதன்கிழமை) காலை 6 மணி அளவில் மதுரையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி பழங்களுடன் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முருகன் (52) என்பவர் ஓட்டி சென்றார். இந்த லாரியின் பின்னால் பி சான்ட் ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரம் நோக்கி கனக ரக லாரி ஒன்றும் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை அனிஷ் (45) என்பவர் ஓட்டி சென்றார். மணல் லாரி திடீரென பழ லாரியை முந்தி செல்ல முயற்சித்தார். அப்போது எதிர்பாராமல் அரசு பஸ் ஒன்று எதிரே வந்தது.
இதனால் சுதாரித்த கனிம வள லாரி டிரைவர் திடீரென இடது புறம் திருப்பியதில் முன் சென்ற பழ லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பழ லாரி நிலை குலைந்து பாலத்தின் தடுப்புகளை உடைத்து அந்தரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. பழங்கள் சாலையில் சிதறின. பழ லாரி டிரைவர் முருகன் காயம் அடைந்தார். அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். களியக்காவிளை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கனிமவள லாரி டிரைவர் அனிஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.



