மார்த்தாண்டம், பிப். 16 –
குழித்துறை அருகே பழையபாலம் செல்லும் பகுதியை சேர்ந்தவர் டிக்சன் (30) தொழிலாளி. இவரது பைக்குகள் வீட்டில் வெளியில் நிறுத்தி வைப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பைக் வெளியே நிறுத்தி வைத்துவிட்டு, தூங்க சென்றுள்ளார். பின்னர் நேற்று காலையில் பார்த்தபோது அங்கு நிறுத்தி இருந்த ஒரு பைக் மாயமானது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிக்சன் தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.
அதில் மர்ம நபர் ஒருவர் அதிகாலையில் வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்து பைக்கை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இது குறித்து டிக்சன் சிசிடிவி கேமரா காட்சிகளுடன் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் திருட்டில் ஈடுபட்டவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



