தஞ்சாவூர், பிப்ரவரி 26 –
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயா அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் சார்பில் குழந்தைகள் நலம் சார்ந்த துறைகளுக்கான கூராய்வு கூட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயா தலைமை தாங்கினார். கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் குழந்தை திருமணம், பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளர்கள், சுகாதாரம், ஊட்டச்சத்து, குழந்தைகள் இல்லங்கள், குழந்தை உரிமைகள் மற்றும் இலவச கட்டாய கல்வி சட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது
கூட்டத்தில் ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயா பேசும் போது: ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய குழந்தையாக பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அளிப்பது ஒவ்வொருவரும் கடமையாகும். குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை படிப்படியாக குறைக்க அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படும் நிலையில் குழந்தை உதவி மையத்திற்கு 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் உஷா நந்தினி, ஜெயசுதா, செல்வேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர்.



