குளச்சல், மே 20 –
குளச்சல் அருகே வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் ததேயுஸ் மகள் அவந்திகா சினிமோள் (24). இவர் குளச்சலில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவந்திகா சினிமோள் பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் மகள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே அவந்திகா சினிமோளுக்கும், மணக்குடியை சேர்ந்த உறவினரான வாலிபர் ஒருவருக்கும் காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இளம்பெண் அந்த வாலிபருடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பெற்றோர் இருவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். ஆனால் இவரது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவந்திகா பெற்றோர் வீட்டில் இருந்த நகை பணத்தை சரிபார்த்தனர். அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் தங்க நகைகள், ரூ.3.5 லட்சம் போன்றவற்றை காணவில்லை. மாயமான மகள் தான் நகை பணத்தை எடுத்து சென்று இருப்பார் என்று கருதிய தாய் மேரி வசந்தா இது குறித்து குளச்சல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மாயமான அவந்திகா சினிமோள் மற்றும் மணக்குடி வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


