நாகர்கோவில், ஜூன் 9 –
குளச்சல் அருகே உள்ள குறும்பனை பகுதியை சேர்ந்தவர் ராஜம். இவரது இரு மகன்களான ரித்திக் ரோஷன் (15), ஆதவன் (8) ஆகிய இருவரும் கடந்த 3.11.2023 அன்று மாயமானார்கள். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, குளச்சல் கடற்கரை பகுதி நோக்கி சிறுவர்கள் சென்ற காட்சிகள் இருந்தன. அதன் பின்னர் சிறுவர்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை.
தனது மகன்களை கண்டுபிடித்த தரக்கோரி ராஜம் ஹேபியர்ஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். மாவட்ட காவல்துறை விசாரணை நடந்து வருவதாக பதில் அளித்தனர். ஆனால் சிறுவர்கள் கதி என்ன என்பது மூன்று ஆண்டுகளாகியும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. தனது மகன்கள் கதி என்ன என்பது தெரியாமல் கடந்த 3 ஆண்டுகளாக ராஜம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்.
தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் ராஜம், தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் குமரி மாவட்டத்திற்கு நேற்று வந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் ராஜம் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில்: சிசிடிவி காட்சிகள் சம்பவத்தன்று இரவு 8:20 மணி அளவில் தாசன் மருத்துவமனை அருகிலும், 8.30 மணி அளவில் சைமன் காலனி சர்ச் பகுதிn ல் எனது இரு மகன்களும் அந்த பகுதியை சேர்ந்த நபருடன் செல்வதாக பதிவாகியுள்ளது. ஆனால் அந்த காட்சிகளை மறைத்து, துறைமுகம் பகுதியில் எனது மகன்கள் செல்லும் காட்சிகளை மட்டும் போலீசார் வைத்துக் கொண்டு கடலில் விழுந்திருக்கலாம் என்று தவறான முடிவு உருவாக்க முயற்சிக்கின்றனர்.
சந்தேக நபர்களிடம் உரிய விசாரணை நடத்தாமல், என்னை குற்றவாளியாக்க முயற்சி நடக்கிறது என்று கூறிய ராஜம், தனது பிள்ளைகள் சென்ற பாதையை விளக்கும் வகையில் ஒரு வரைபடத்தை எடுத்து வந்திருந்தார். அமைச்சர்கள் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து, மற்ற 3 குழந்தைகளுடன் ராஜம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஏடிஎஸ்பி கரையரசன் தலைமையில் போலீசார் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு 8 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது வழக்கை மாவட்ட குற்றப்பிரிவு 2 க்கு மாற்றப்பட்டுள்ளது. ஏடிஎஸ்பி மேற்பார்வையில் போலீசார் விசாரணை நடத்துவார்கள். இந்த விசாரணை முடிவு எட்டப்படாத பட்சத்தில் சிபிசிஐடி க்கு வழக்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. இதை ஏற்ற ராஜம் அங்கு இருந்து சென்றார்.


