நாகர்கோவில், மே 14 –
கருங்கல் அருகே பாலப் பள்ளம் பகுதி சேர்ந்த முருகன் என்பவரும் தனது மகள் சுருதி (14) 9-ம் வகுப்பு மாணவி மற்றும் 9 வயது மகனும், அவரது நண்பரான சுஜி லாரன்ஸ், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகன் சுஜித் (14) ஆகியோர் உட்பட 7 பேர் குறும்பனை அருகில் உள்ள பாரியக்கல் கடற்கரை பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை மாலையில் வந்திருந்தனர். பெரியவர்கள் கடற்கரையில் இருக்க, குழந்தைகள் கடலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென சுருதி மற்றும் அஜித் ஆகியோரை கடல் அலை இழுத்து சென்றது. இதை பார்த்ததும் கரையில் இருந்த பெற்றோர், உறவினர்கள் கூச்சலிட்டனர். அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் உடனடியாக கடலுக்குள் இறங்கி அவர்களை மீட்க முயன்றனர். சிறிது நேரத்தில் சுஜித்தை அலை கரையில் கொண்டு வந்து வீசி உள்ளது. ஆனால் சுருதி கடலில் மாயமானார். இது குறித்து தகவல் அறிந்ததும் குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் மற்றும் குளச்சல் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுருதியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
நேற்று மீண்டும் 2வது நாளாக தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. உடல் கிடைக்கவில்லை. ஆனால் 3ம் நாளாக மீண்டும் மீண்டும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது பாரியக்கரை கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மிடாலம் கடற்கரை பகுதியில் உள்ள கடலில் சிறுமியின் உடல் மிதந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் சிறுமியின் உடலை படகு மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குமாரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



