தாசில்தார் சக்திவேல் அதிரடி நடவடிக்கை
கிருஷ்ணகிரி, செப். 8-
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டத்திற்குட்பட்ட சிகரலப்பள்ளி தரப்பு தண்ணீர்பள்ளம் கிராமத்தில், அனுமதியின்றி நொரம்பு மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் வருவாய்த்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ்குமார் உத்தரவின்பேரில், பர்கூர் வட்டாட்சியர் சக்திவேல் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் அப்பகுதியில் நேற்று காலை 9.30 மணியளவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சோதனையில், உரிய அனுமதியின்றி நொரம்பு மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து TN-39 AS-3993 என்ற பதிவு எண் கொண்ட டிப்பர் வாகனம், அதில் இருந்த கனிமத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் வாகனம் பர்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மாவட்டத்தில் அனுமதியின்றி கனிமங்களை வெட்டி எடுப்பது, கடத்துவது மற்றும் சட்டவிரோதமாக கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பர்கூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்று, வட்டாட்சியர் சக்திவேலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிம வளங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்து கடத்துபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



