களியக்காவிளை, ஜூன் 23 –
கொல்லங்கோடு அருகே பாத்திமாநகர், குரியன்விளையில் உள்ள பத்ரகாளி கோவிலில் முன்காலத்தில் 3 திருமுடிகளுடன் தின பூஜை, திருவிழா, பரணேற்று உள்ளிட்ட பூஜைகளுடன் சிறப்பாக நடந்து வந்தது. நாளடைவில் கோயில் திருவிழா உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்படவில்லை. அப்போதைய கோயில் நிர்வாகிகள் கோயில் பூஜை உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தப்படவில்லை.
இந்த நிலையில் எப்போது கேட்டாலும் திரும்ப திருமுடிகள் தரலாம் என்ற உடன்படிக்கையுடன் நீலகேசி அம்மன் திருமுடி பார்திபபுரம் பார்த்தசாரதி அம்மன் கோயிலுக்கு கொடுக்கப்பட்டது. பத்திரகாளி அம்மன் திருமுடி மூவோட்டு கோணம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலுக்கு கொடுக்கப்பட்டது, கணபதி சிலை செங்கவிளை கணபதி கோயிலுக்கு கொடுக்கப்பட்டது.
தற்போது சுமார் 65 – வருடங்களுக்கு பிறகு உடன்படிக்கையின்படி இந்த திருமுடிகள் குரியன்விளை கோயில் சார்பில் கேட்கப்பட்டது. ஆனால் திருமுடிகள் கொடுக்கப்படவில்லை. சுமார் 30 வருடங்களாக மறுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவு படி பார்த்திபபுரம் பத்திரகாளி அம்மன் கோயிலில் இருந்த திருமுடி இன்று குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி முடிப்புரை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதற்காக இன்று குழித்துறை கோர்ட் ஆமினா மற்றும் புதுக்கடை போலீசாரின் பாதுகாப்புடன் திருமுடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக தலைவர் விக்கிரமன் சுவாமி தலைமை வகித்தார். செயலாளர் சாந்தகுமார், பொருளாளர் சசி வக்கீல் செல்வகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கோயில் தந்திரி நாராயண ராவ் வாசுதேவ், ஜோதிடர் சுகுமார்ஜி, ஒய்வு பெற்ற மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார், ஓய்வு பெற்ற தீயணைப்பு துறை அலுவலர் பிரதாபன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



