நாகர்கோவில், ஆக. 27 –
மிலாடி நபி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி வெளிமார்க்கெட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதைத் தடுக்க, குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட தெற்கு சூரங்குடியைச் சேர்ந்த மகாபு சுப்புகனி என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 16 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.6,550 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் தக்கலை, கொற்றிக்கோடு, ஈத்தாமொழி உள்ளிட்ட பகுதிகளிலும் மது விற்றதாக மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் கைது செய்யப்பட்ட 9 பேரிடமிருந்து சுமார் 110 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


