நாகர்கோவில், ஜூலை 9 –
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுய கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளதையொட்டி, நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இப்பணிகள் குறித்து பொதுமக்களிடையே புரிதலை ஏற்படுத்தும் வகையில் வடசேரி பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்து, கொடியசைத்து துவக்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா,உதவி ஆட்சியர் பயிற்சி மோனிகா முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கலெக்டர் தெரிவிக்கையில்: இந்தியா தனது மக்கள் தொகை கணக்கெடுப்பான “சென்சஸ் 2027“ஐ முழுவதுமாக டிஜிட்டல் முறையில் நடத்த தயாராகி வருகிறது. நாடு முழுவதும் நடத்தப்படும் இந்த சர்வே வாயிலாக மக்கள் தொகை குறித்த புள்ளிவிவரங்களை முழுமையாக அறிய முடியும். நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூலை 17ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கணக்கெடுப்பு படிவத்தில் 33 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். தனிநபர் பாதிக்க கூடிய எந்தவொரு தகலும் இடம்பெறாது. அவ்வாறு இடம்பெறும் எனில் இரகசியமாக வைக்கப்படும்.
இக்கணக்கெடுப்பு பணியில் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளி ஆசிரியர்கள், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெறுவர். ஒரு கணக்கெடுப்பாளருக்கு 200 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 20 நபர்களை சந்தித்து, தகவல்களை பதிவு செய்ய வேண்டும். 6 கணக்கெடுப்பாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என கூறினார்.
நடைபெற்ற பேரணியில் மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.சரோஜா, மாநகராட்சி அலவலர்கள், நாகர்கோவில் பெண்கள் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



