நாகர்கோவில், மார்ச் 16 –
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மாதிரி நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு முதல் விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம் மற்றும் கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 3 குழுக்கள் வீதம் மற்றும் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுடன் 18 நிலை கண்காணிப்பு குழுக்களும் இணைந்து 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் ஒவ்வொரு வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் வீடியோ பதிவாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
குமரி, கேரளா எல்லையை ஒட்டி உள்ள மாவட்டம் என்பதால் களியக்காவிளை, கோழி விளை, நெட்டா போன்ற எல்லைப் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. நேற்று இரவு தொடங்கிய சோதனையை தொடர்ந்து குறிப்பிட்ட சொகுசுகாரர்கள், அரசு, தனியார் பேருந்துகள், லாரிகள் மற்றும் வேன்கள் தடுத்து நிறுத்தப்பட்டு முழுமையாக சோதனையிடப்பட்டன.
இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அழகு மீனா தெரிவிக்கையில்: மாவட்டத்தில் தேர்தல் நடத்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய பறக்கும் படையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள் என தெரிவித்தார். மேலும் அவர் இன்று பார்வதிபுரம் பகுதியில் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



