நாகர்கோவில், மே 9 –
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக மாணவி தனது தந்தையின் செல்போனில் இருந்து அடிக்கடி ஃபோன் பேசி வந்துள்ளார். இதை கண்டித்து மாணவியின் செல்போன் பயன்பாட்டிற்கு பெற்றோர் தடை விதித்தனர். இதன் பின்னர் அவ்வப்போது தனியாக மாணவி அமர்ந்து இருப்பது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. மாணவி நடவடிக்கையை பெற்றோர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 8ம் தேதி மாணவி திடீரென மாயமானார். ரிசல்ட் சம்பந்தமாக பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து வீட்டில் அவரது அறையில் சோதனை செய்தபோது அவர் ரகசியமாக ஒரு செல்போன் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போனில் இருந்து ஒரு நம்பருக்கு அடிக்கடி போன் செய்து பேசியிருந்தார். அந்த நம்பரை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாணவியின் தந்தை கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுசீந்திரம் அருகே உள்ள புதுக் கிராமம் காலனி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி நாகர்கோவில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார். கடந்த 6 ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி பின்னர் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவி குறித்த தகவல் கிடைக்கவில்லை. இதை அடுத்து மாணவியின் தந்தை சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


