நாகர்கோவில், மே 18 –
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2025-2026ம் கல்வியாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அரசுப்பள்ளிகளில் 12ம் வகுப்பு பயின்று, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: 2025-2026ஆம் கல்வியாண்டில் நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்த 10,179 மாணவர்களும், 11,360 மாணவிகளும் என மொத்தம் 21,539 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 9,780 மாணவர்களும், 11,248 மாணவியர்களும் என மொத்தம் 21,028 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு அளவில் 97.63 சதவீதம் பெற்று 3வது இடம் பெற்றுள்ளது.
மேலும் அரசு பள்ளிகளில் 2950 மாணவர்களும், 3262 மாணவிகளும் என மொத்தம் 6212 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளார்கள். அதில் 2758 மாணவர்களும், 3213 மாணவிகளும் என மொத்தம் 5971 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்று 96.12 சதவீதம் பெற்று தமிழ்நாடு அரசுப்பள்ளிகள் அளவில் நமது மாவட்டம் 5 வது இடம் பெற்றுள்ளது மிகவும் பெருமைக்குரியது.
அதனடிப்படையில் இன்று அரசுப்பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற கோட்டாறு அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த மாணவி அக்ஷயா 590, கொட்டாரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவி அக்ஷயா 589 மதிப்பெண்களும், கன்னியாகுமரி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியை சார்ந்த மாணவன் ராகவா ஹரி 586 மதிப்பெண்களும், கன்னியாகுமரி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியை சார்ந்த மாணவி பாகிஷியா 581 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் நாகர்கோவில் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த மாணவன் ஜெய்ரேஷ் பிராங்க் 581 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள். இதற்காக சிறப்பாக பணியாற்றிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கல்வி, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ஜெயராஜ், நாகர்கோவில் கல்வி அலுவலர் ஜெயராஜ், தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் அஜிதா, துணை காவல் கண்காணிப்பாளர் பிச்சையா, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



