தஞ்சாவூர், மே 28 –
தஞ்சாவூர் பால் உற்பத்தியாளர்களுடன் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆலோசனை நடத்தியுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பால் பெருக்குத் துறை, ஆவின் அலுவலர்கள், விற்பனை முகவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆவின் பொருள்களின் விற்பனை அதிகரித்தல், பால் உற்பத்தி அதிகரித்தல் மற்றும் அலுவலகத் திட்ட பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் பால் உற்பத்தியாளர்கள் சந்திக்கும் இடர்பாடுகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் உற்பத்தியாளர்களின் பால் முழுவதையும் தங்கு தடை இன்றி ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டு வருவது குறித்தும் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு வழங்கப்பட்டு வரும் பால் பணம் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சங்க ஈட்டிய நிகர லாபத்தில் போனஸ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருவது குறித்தும், ஆண்டு முழுவதும் தொடர்ந்து பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டு அதன் மூலம் வழங்கப்பட்டு வரும் உதவித்திட்டங்கள் குறித்தும் அதன் மூலம் பயன் பெற்று வரும் பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் துணைப்பதிவாளர் (பால்வளம்) வெங்கடேசன், மேலாளர் (தஞ்சாவூர் ஒன்றியம்) சரவணக்குமார், கூட்டுறவு சார் பதிவாளர்கள், சரக முதுநிலை ஆய்வாளர்கள், ஆவின் மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.



