நாகர்கோவில், ஜூன் 13 –
கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்துறை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகள் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில், மாவட்டத்திற்குட்பட்ட சுற்றுலா தலங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சி தலைவர் பிரதாப் தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் பார்வையிட்டார்.
அருவிக்கரை ஆற்றின் குறுக்கே கம்பி வடம் ஊர்தி (ரோப் கார்) அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாத்தூர் தொட்டிபாலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, தொட்டிபாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவினை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளுக்கு கழிப்பறை வசதி, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட திற்பரப்பு அருவியின் கரையோரம் ரூ.4.30 கோடி மதிப்பில் பல்நோக்கு வளாகம், பெண்கள் உடை மாற்றும் அறை மற்றும் பூங்கா மேம்பாடு உள்ளிட்ட பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் சிற்றார் அணை பகுதியில் ரூ.3.40 கோடி மதிப்பில் படகுதளம், படகு போக்குவரத்து, உணவகம், வாகனங்கள் நிறுத்திமிடம், ஓய்வு கூடாரம் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரட்டை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வசதி ஏற்படுத்தி பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கும் ஒப்பந்ததாரருக்கும் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது: அண்டை மாநிலமான கேரளாவில் சுற்றுலாத்துறைக்கு அதிக நிதியும், அதன் மூலம் அதிக வருவாயும் கிடைக்கிறது. அதேபோன்று நமது கன்னியாகுமரி மாவட்டத்திலும் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. தற்போது மாத்தூர் தொட்டிப்பாலத்தில் மட்டும் ரூ.3.25 கோடி மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றது. ஊரக உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, அடுத்த பட்ஜெட்டில் கூடுதல் திட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நீர் வள ஆதாரத்துறையின் கீழ் வரும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முறையாக அடையாளம் காணப்பட்டு அங்குள்ள மக்களுக்கு முன்னரே உரிய அறிவிப்பு வழங்கப்பட்டு, சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பெருந்தலைவர் காமராசர் காலத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாத்தூர் தொட்டிப்பாலம் கட்டப்பட்டது. நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதே இங்கு காமராஜரின் திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் எனப் பலமுறை சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளேன். தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதால், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, வரும் காலங்களில் இங்கு நிச்சயம் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இப்பகுதியில் நில எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்வது உள்ளிட்ட பொதுமக்களின் இதர கோரிக்கைகளையும், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரின் மூலம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.செல்லசுவாமி (பத்மநாபபரம்) ,ற்.றி.பிரவின் (விளவங்கோடு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி ஆட்சியர் (பயிற்சி) மோனிகா, மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் விஜில் சிங், திருவட்டார் வட்டாட்சியர் மரகதவல்லி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஒப்பந்ததார்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



