நாகர்கோவில், ஏப். 29 –
குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு இதே மாதம் 25ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் குழந்தைகளை போக்சோ குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் “நிமிர்” என்ற திட்டம் தொடங்கப்பட்டது. நிமிர் நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தலைமை வகித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது: சமூக வலைதளங்கள் மூலமாக பழகி குழந்தைகள் ஏமாறுவதை தடுக்க தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே குழந்தைகள் பாதிக்கப்பட்ட வழக்குகள் பற்றியும், அதில் குற்றவாளிகள் பயன்படுத்திய வழிமுறைகளையும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஆண், பெண் குழந்தைகள் இருபாலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், டியூஷன் மற்றும் கோடைகால சிறப்பு வகுப்புகள் செல்லும் குழந்தைகளை கண்காணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, போக்சோ குற்றங்கள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும். என பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட கண்காணிப்பாளர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் மற்றும் அனைத்து உட்கோட்ட நிமிர் குழுவை சேர்ந்த பெண் போலீசார் கலந்து கொண்டனர்.



