நாகர்கோவில், ஜுன் 1 –
குமரி தந்தை மார்ஷல் நேசமணி 58வது நினைவுநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் நாகர்கோவில் வேப்பமூடு மார்ஷல் நேசமணி மணிமண்டபத்திலுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆஸ்டின் (நாகர்கோவில்), ஆர்.செல்லசாமி (பத்மநாபபுரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: ‘குமரி தந்தை”, ‘கன்னியாகுமரி மாவட்டத்தின் சிற்பி “, ‘மார்ஷல்“ என அனைத்து மக்களால் புகழப்பட்டு வரும் மாபெருந்தலைவர் மார்ஷல் நேசமணி. நீதிக்காக போராடிய நெஞ்சுரமிக்க தலைவர், நேர்மையோடு வாழ்ந்து காட்டிய தலைவர், தன்னலம் கருதாத தியாகச் செம்மல், மார்ஷல் நேசமணி அவர்கள் 01.06.1968-ஆம் ஆண்டு தனது 73-ஆவது வயதில் காலமானார்கள். அன்னாரின் 58-வது நினைவுநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் மார்ஷல் நேசமணி அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரி பிரின்சி லதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வலெட் சுஷ்மா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ஆறுமுகம், மார்ஷல் நேசமணியின் பேரன் ரெஞ்சித் அப்பலோஸ், தயாபதி நளதம், மார்ஷல் நேசமணி கொள்ளுப்பேத்தி குடும்பத்தினர், நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர் நவீன், மாதவன், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



