மார்த்தாண்டம், ஜூன் 8 –
தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் ஆன நிலையில் தமிழகம் முழுவதும் மாற்று கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் தவெகவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குமரி மேற்கு மாவட்டம் கிள்ளியூர் பேரூராட்சி தலைவியாக இருந்து வரும் திமுகவை சேர்ந்த ஷீலா மற்றும் அவரது கணவர் பேரூர் திமுக செயலாளரும், வார்டு கவுன்சிலருமான சத்தியராஜ் உட்பட 9 கவுன்சிலர்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட திமுகவினர் தவெகவில் இணைந்தனர்.
இவர்கள் நேற்று இரவு கிள்ளியூர் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் குமரி மேற்கு மாவட்ட செயலாளர் சபின் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
தேர்தலை சந்திக்கும் முன்னே குமரி மாவட்டத்தில் ஒரு பேரூராட்சியை தவெக தன்வசப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் காலத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் குமரி மாவட்டத்தை தவெகவின் கோட்டையாக மாற்றுவோம் என சூழுரை ஏற்றனர்.



