மார்த்தாண்டம், மே 12 –
கருங்கல் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2024-25ன் கீழ் கருங்கல் பேருந்து நிலையம் மேம்பாடு செய்ய ரூ.5.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த பணியை 30 தினங்களுக்குள் செய்து முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், ஒப்பந்ததாரர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த திட்டத்தீன் மூலம் சுமார் 7000 மக்கள் தினசரி பயனடைவார்கள். எனவே இப்பணிகளை துரிதமாக மேற்கொள்வதோடு, கட்டுமான பணிகள் தரமானதாகவும், உறுதிதன்மையினை உறுதி செய்திட ஒப்பந்ததாரர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 2024-2025 ம் வருடம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 9.20 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுதல் பணி நடைபெற்று வருகிறது. தற்போது மேற்கூரை பணிக்கான தூண்கள் அமைக்கும் பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும், சுவர்களில் பூச்சு பணி செய்யவும், களியக்காவிளை மீன்சந்தையிலிருந்து வரும் கழிவுநீர் வடிகாலை சீரமைக்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் கட்டுமான பொருட்களுக்கான பற்றாக்குறை சரி செய்து கொடுக்க உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி இயக்குநர் ஆகியோர்கள் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், விரைந்து பேருந்து நிலைய பணிகள் முடித்து களியக்காவிளை பேருந்து நிலையம் திறப்புவிழாவிற்கு ஆயத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
நடைபெற்ற ஆய்வுகளில் உதவி செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்) பாண்டியராஜன், செயல் அலுவலர்கள் சத்யதாஸ் (கருங்கல்), சந்திரகலா (களியக்காவிளை), கருங்கல் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் சிவராஜ், இளநிலை பொறியாளர், பணி மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



