கன்னியாகுமரி, ஜனவரி 31 –
கன்னியாகுமரி அருகே மாதவபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (28) மீனவர். சம்பவத்தன்று இவரும் இவரது நண்பருமான இதிகாஸ் என்பவரும் மாதவபுரம் அய்யா கோவிலுக்கு அருகில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கொட்டாரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (31) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சேகர் (28) ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து இதிகாசை முன் விரோதம் காரணமாக தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்கள்.
இதை அருகில் நின்று கொண்டிருந்த ஸ்ரீனிவாசன் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேகர் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்றவற்றால் ஸ்ரீநிவாசனை சரமாரியாக தாக்கினார்கள்.
இதில் பலத்த காயம் அடைந்த ஸ்ரீனிவாசனை மீட்டு அக்கம் பக்கத்தினர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் முத்துக்குமார் மற்றும் சேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


