நாகர்கோவில், ஜூலை 27 –
கன்னியாகுமரி அருகே ‘பண்ணிக்குண்டு குளத்தில்’ குறுக்கே கட்டப்பட்டுள்ள ‘நான்கு வழிசாலை பாலம்’ தாழ்வாக கட்டியதால் குளத்திற்குள் தேங்கும் தண்ணீரிலிருந்து பாலத்தை காப்பாற்றும் நோக்கத்தில் குளத்திலிருந்து மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
தகவல் அறிந்த குமரி மாவட்ட நீர்பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, மீன்வளத்துறை முன்னாள் தலைவர் சகாயம், என்.பி சேனல் தலைவர் தாணுபிள்ளை, பி.பி சேனல் தலைவர் முருகேசபிள்ளை உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியினை ஆய்வு செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக, நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் வல்சன்போஸ், உதவி பொறியாளர் பிரேமலதா ஆகியோர் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நீர்வளத்துறை பணியாளர்கள் வெற்றி, எட்வர்ட் ஆகியோர் குளத்திலிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றுவதை தடுத்து நிறுத்தினர்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த நாற்கர சாலை அதிகாரிகள் மற்றும் பணியினை மேற்கொள்ளும் அலுவலர்கள் ஆகியோரிடம் பாசனத்துறை நிர்வாகிகள் குளத்தின் கரையானது நாற்கர சாலை பணிகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதேபோன்று மீண்டும் கரையை உருவாக்கவும், ஏற்கனவே இருந்த குளத்தின் கரையை முழுமையாக அகற்றி, அதற்கு பதிலாக அருகிலிருந்த தாழ்வான பாறை பள்ளம்த்தில் உருவாக்கப்பட்ட புதிய கரை காரணமாக குளத்தின் தண்ணீர் மட்டம் தாழ்வாக அமைந்துள்ளதுடன் தண்ணீர் கொள்ளளவு குறைந்து விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அப்போது குளத்தில் உயரமாக தேங்கியுள்ள தண்ணீர் காரணமாக பாலத்தின் தூண்களுக்கு சேதம் ஏற்படும் என்று தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் தரப்பிலும் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து இரண்டு துறை அதிகாரிகளும், பாசனத்துறை நிர்வாகிகளும், விவசாயிகளும் கலந்து பேசி, ஏற்கனவே இருந்த இடத்தில் அதே உயரத்தில் குளத்திற்கு உடனடியாக மீண்டும் ‘புதிய கரை’ அமைப்பது எனவும், அதற்கு வசதியாக சிறிதளவு தண்ணீரை விவசாயத்திற்கு பாதிப்பு இல்லாமல் வெளியேற்றுவது சம்பந்தமாகவும், குளத்தின் வடமேற்கு பகுதியிலுள்ள மடை மற்றும் வயல்களுக்கு உழவு இயந்திரம் போன்றவை செல்வதற்காக ஏற்கனவே குளத்தின் கரையில் இருந்த சாலையை அடைக்காமல் இருப்பதற்கு கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.



