நாகர்கோவில், ஜூலை 4 –
மார்த்தாண்டம் அருகே கடையால் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் வர்கீஸ் மனைவி மேரி வெர்ஜின் (45). இவர் குழித்துறை குற்றவியல் நீதிமன்றம் 1ல் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், ஓசூரை சேர்ந்த பவுல் பிரைட் (51) மற்றும் அவரது மனைவி சுமிதா ஜாஸ்மின் (45) ஆகியோர் எங்களது குடும்ப நண்பர்கள் ஆவார்கள். கணவன் மனைவி இருவரும் ஆசிரியர்களாக உள்ளனர். ஓசூரில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்களது பள்ளியில் ஆசிரியை வேலை தருவதாக கூறி என்னிடம் ரூ.5 லட்சம் கேட்டனர். நானும் அவர்கள் கேட்டபடி பல்வேறு தவணைகளாக 5 லட்சம் கொடுத்தேன். ஆனால் வேலை தரவில்லை.
இது குறித்து கேட்டபோது ரூ.2.37 லட்சத்தை மட்டும் திருப்பித் தந்தனர். மீதி பணம் ரூ.2.33 லட்சத்தை தரவில்லை. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு வேண்டும் என மனுவில் கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் கடையாலுமூடு போலீசார் பவுல் பிரைட் அவரது மனைவி சுமிதா ஜாஸ்மின் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


