தென்காசி, மார்ச் 31 –
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பரப்புரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, “அதிமுக தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கழகத்தின் கடையநல்லூர் தொகுதி வெற்றி வேட்பாளர் குட்டியப்பா என்ற கிருஷ்ணமுரளி, தென்காசி தொகுதி வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், ஆலங்குளம் தொகுதி வேட்பாளர் கே.ஆர்.பி. பிரபாகரன், சங்கரன்கோவில் தொகுதி வேட்பாளர் டாக்டர் திலீபன் நிறுத்தப்பட்டிருக்கிறார். இவர்கள் அனைவருக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். வாசுதேவநல்லூர் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். தென்காசி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளையும் வென்று அதிமுகவின் கோட்டையாக மாற்றுங்கள்.
அதிமுக ஆட்சி வந்தவுடன் நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை புதிய மாவட்டமாக உருவாக்கினோம். அதில்தான் இந்த 5 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. மாவட்டத்தைப் பிரிப்பதால் நிர்வாகத்தில் எளிமையாக தேவையான காரியங்கள் நிறைவேற்ற முடியும்.
அதிமுக தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்திருக்கிறது. அதிமுக ஆளுங்கட்சியாக வந்தவுடன் செய்பவை பற்றி அறிவித்தது. அந்த பிரமாண்டமான அறிவிப்புகளைப் பார்த்து திமுகவும் அறிவித்துள்ளனர்.
8 ஆயிரம் ரூபாய்க்கு கூப்பன் கொடுப்பார்களாம். உங்களுக்குத் தேவையான பொருட்கள் என்னென்னவென்று அவர்களே சொல்லிவிட்டனர். ஏனெனில் அவர்கள் ஏஜென்சி எடுத்திருப்பார்கள். டோக்கன் திமுககாரரிடம் வாங்க வேண்டும். அதுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 10 ஆயிரம் ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஃப்ரிட்ஜ் வழங்கப்படும். விலையில்லா பருப்பு எண்ணெய் வழங்கப்படும். பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம், 5 லட்சம் பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 35 ஆயிரம் தான். நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும். ஆண்களும் நகரப் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 சிலிண்டர் மானியமாக வழங்கப்படும். பட்டப்படிப்பு படித்து பதிவுசெய்த இளைஞர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், +2 வரை படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். 100 நாள் வேலைத்திட்டத்தை அதிமுக கொடுத்த அழுத்தம் காரணமாக 125 நாளாக உயர்த்தியுள்ளனர். அது 150 நாளாக உயர்த்தப்படும்.
திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பொய் சொல்லி வாக்கைப் பெற்று ஆட்சிக்கு வந்தவர்களுக்கு இந்த தேர்தல் மூலம் பதிலடி கொடுங்கள்” என்று பொதுமக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தில் பரப்புரையாற்றினார்.



